நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை வார்த்தைகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இவர்களின் பண்பட்ட முதுமொழியையே பழமொழி என அழைக்கிறோம். இது புண்பட்ட மனதை பண்படுத்தும் திறன் வாய்ந்தது எனலாம். மனதை பண்படுத்தும் சில பழமொழிகளை இங்கு காணலாம்....
- தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
- உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
- சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
- மவுனம் கலக நாசம்.
- கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
- மலையை துளைக்குமாம் சிற்றுளி.
- உன் நாக்கிலே இருக்கிறது நன்மையும், தீமையும்.
- எண் இல்லாதவன் கண் இல்லாதவன். எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.
- கூலியை குறைத்து வேலையை கெடுக்காதே.
- நடந்து கொண்டிருந்தால் ஊரெல்லாம் உறவு. படுத்துக்கொண்டால் பாய்கூட பகை.
- கண்டதை சொன்னால் கொண்டிடும் பகை.
- அற முறுக்கினால் அற்றுதான் போகும்.
- இமை குற்றம் கண்ணுக்கு தெரியாது.
- குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று.
- ஈட்டி மரம் பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன.
- கடுக்காற்று மழை கூட்டும் கடும் சிநேகம் பகை கூட்டும்.
- குருமொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
- குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
- ஊருடன் பகைப்பின் வேருடன் கெடும்.
- கல்லாதார் செல்வத்திலும் கற்றவர் வறுமை சிறப்பு.
- உண்ணா சொத்து மண்ணாய் போகும்.
- அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தீர்க்க வேண்டும்.
- எண்ணி செயல்படுபவன் கெட்டி, எண்ணாமல் செயல்படுபவன் மட்டி.
- புத்தி கெட்ட ராசாவுக்கு மதிகெட்டவன்தான் மந்திரி.
- பெருமையும் சிறுமையும் நாவால் வரும்.
- கைவிட்டு போனதை நினைத்து வருந்துபவன் புத்தி கெட்டவன்.
- உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
- பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லி தாழ்ந்தவனுமில்லை.
- செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை காலத்திற்கு வரும்?
- கோணி கோடி கொடுப்பதைக் காட்டிலும் கோணாமல் காணி கொடுப்பது சிறப்பு .
- கொற்றவன் தன்னிலும் கற்றவன் மேலோன்.
- சுயபுத்தி இல்லையென்றாலும் சொல்புத்தி வேண்டாமா?
- இறைக்க ஊறும் மணற்கேணி . ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
- பொறுத்தார் பூமி ஆள்வார். பொங்கினார் காடாள்வார்.
- கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தை பாரான்.
- வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்.
- இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
- எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா ?
- வட்டி வாங்கும் ஆசை முதலுக்கே கேடு.
- கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.
- உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை.
- சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
- கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
- பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிக்குதாம்.
🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅
Good collection.
ReplyDeleteமகிழ்ச்சி !!!.
Delete