"தேடிச் சோறு நிதம் தின்று 😝 பல சின்னஞ் சிறு கதைகள் பேசி 💋 வாடித் துன்ப மிக வுழன்று 😡 பிறர் வாடப் பல செயல்கள் செய்து 👅 நரை கூடிக் கிழப் பருவ மெய்தி 👴 கொடுங் கூற்றுக் கிரை யெனப் பின் மாயும் 💀 பல வேடிக்கை மனிதரைப் போலே 👻 நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 5.

பாரத ரத்னா வெற்றியாளர்கள் - Bharat Ratna Award Winners - Part 5.

Bharat Ratna Awardees.

பாரத ரத்னா வெற்றியாளர்கள்.

1976 - 1987

(PART - 5).

பாரத ரத்னா விருது (Bharat Ratna Award) பற்றிய தொடர் பதிவில் இது ஐந்தாவது பகுதி (Part 5). இதற்கு முன்னால் பார்த்த நான்கு பகுதிகளிலும் பாரத ரத்னா விருதினைப் பற்றியும், இது ஆரம்பிக்கப்பட்ட காலமான 1954 தொடங்கி 1975 வரை யாருக்கெல்லாம் கொடுக்கப்பட்டது... எதற்காக கொடுக்கப்பட்டது என்பது பற்றியும் பார்த்து வந்தோம்.

Bharat Ratna Award

அதன் தொடர்ச்சியாகிய இப்பதிவில் 1976 முதல் 1987 வரையான கால இடைவெளியில் பாரதரத்னா விருது பெற்றவர்களைப்பற்றிய (Bharat Ratna Award Winners) விபரங்களை பார்க்க இருக்கின்றோம்... பார்க்கலாம் வாருங்கள்...

இத்தொடரின் முதல் பகுதியை (Part 1) படிக்க அடுத்து கொடுக்கப்பட்டுள்ள லிங்கை "கிளிக்"குங்க..

👉👉பாரத ரத்னா - Bharat Ratna Award - Part 1.👈👈

    கே.காமராஜர்.

    K. Kamaraj.

    பெயர் :- கே.காமராஜர் - K. Kamaraj.

    நாடு :- இந்தியா - India.

    மாநிலம் :- தமிழ்நாடு (Tamilnadu). விருதுநகரில் (Virudhunagar) பிறந்தார்.

    பிறப்பு :- 1903 ஜூலை 15.

    இறப்பு :- 1975 அக்டோபர் 2.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1976. இவருடைய மறைவுக்குப் பின்பே இவருக்கு பாரதரத்னா வழங்கப்பட்டது.

    kamarajar

    வாழ்க்கை முறை :- காமராஜரைப்பற்றி தமிழ்நாட்டில் தெரியாதவர்கள் இருக்கவே முடியாது. அப்படி இருந்தால் அவர்கள் தமிழர்களாக இருக்க வாய்ப்பில்லை என்பதே உண்மை.

    சிறுவயதாக இருக்கும்போதே அரசியல் பொதுகூட்டங்களில் பங்கேற்று வந்ததால் பின்னாளில் ஒரு மிகச்சிறந்த விடுதலை போராட்ட வீரராக வளர்ச்சி பெற்றவர்.

    ஆரம்பக்கட்டங்களில் ஒரு சாதாரண தொண்டனாக காங்கிரஸ் கட்சியில் (Indian National Congress) தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றியவர் பின்பு இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக உயர்வு பெற்றார்.

    வெள்ளையர்களுக்கு அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராடி வெள்ளையர்களால் 9 வருட சிறைத்தண்டனையை பெற்ற இவர்தான் பின்னாளில் தமிழக முதல்வராகி (Chief ministers of  Tamil Nadu) 9 ஆண்டுகள் நல்லாட்சியையும் கொடுத்தார்.

    தன்னுடைய ஆட்சியின்போது பள்ளி குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு (Midday Meal Scheme) திட்டத்தினை அறிமுகப்படுத்தி ஏழை எளிய மக்களை கல்வியில் முன்னேறவைத்தார்.

    நேருவின் (Jawaharlal Nehru) மரணத்திற்கு பிறகு லால் பகதூர் சாஸ்திரியையும் (Lal Bahadur Shastri), சாஸ்திரியின் மறைவுக்குப்பிறகு இந்திராகாந்தியையும் (Indira Gandhi) பிரதமர்களாக (Prime Minister) ஆக்கியதில் முக்கிய பங்குவகித்தவர். தனக்கு பதவி வேண்டும் என எண்ணாமல் அதனை பிறருக்கு விட்டுக்கொடுக்கும் பண்பினை நிரம்பப் பெற்றவராதலால் "கிங் மேக்கர்" (King maker) என்ற பாராட்டைப் பெற்றார்.

    எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர்பெற்ற அவர் தென்னாட்டின் காந்தி எனவும், கர்மவீரர் எனவும் அழைக்கப்பட்டார்.

    தன்னுடைய உழைப்பால் தன்னலம் கருதாது பொதுநலத்துடன் செயல்பட்டு மனித மாண்பின் உச்சத்தை தொட்ட இவருடைய அரசியல் நேர்மையையும் பொதுசேவையையும் பாராட்டி அவருடைய மறைவுக்குப்பின் 1976 ல் இந்திய அரசு அவருக்கு பாரதரத்னா கொடுத்து கவுரவித்தது.

    அன்னை தெரேசா.

    Mother Teresa.

    பெயர் :- அன்னை தெரேசா - Mother Teresa. (இவருடைய இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு - Agnes Gonxha Bojaxhiu).

    நாடு :- அல்பேனியா - Albania. அல்பேனியா நாட்டை பூர்வீகமாகக்கொண்ட இவர் பின்னாளில் இந்தியாவின் குடியுரிமையை பெற்றார்.

    பிறப்பு :- 1910 ஆகஸ்ட் 26.

    இறப்பு :- 1997 செப்டம்பர் 5.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1980.

    Mother Teresa

    வாழ்க்கை முறை :- ஆதரவற்றவர்களுக்கான பாதுகாவலராக போற்றப்பட்ட இவர் அல்பேனியா (Albania) நாட்டை பூர்வீகமாகக்கொண்டவர். இவருடைய இயற்பெயர் "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு" (Agnes Gonxha Bojaxhiu).

    கிறிஸ்தவரான இவர் தன்னுடைய 18 வது வயதில் கன்னியாஸ்திரியாக பொறுப்பேற்று மக்களுக்கு சேவையாற்ற திருவுளம் கொண்டார். அப்படியே 1929 ம் ஆண்டு முதல்முறையாக இந்தியாவின் மேற்கு வங்கத்தில் உள்ள கத்தோலிக்க திருச்சபைக்கு வருகைபுரிந்தார்.

    அந்த திருச்சபையின் விதிமுறைகளின்படி அங்கு பணியில் சேர்பவர்கள் தன்னுடைய பெற்றோர்கள் வைத்த பெயரை துறந்து புதிய பெயரை வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்கிணங்க தன்னுடைய இயற்பெயரான "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு" (Agnes Gonxha Bojaxhiu) ஐ துறக்க முடிவு செய்தார்.

    தனக்கான புதிய பெயரை தேர்வு செய்யும் நிலையிலிருந்த அவருடைய நினைவில் வந்துசென்றவர் பிரான்ஸ் நாட்டின் சகோதரி "தெரசா மார்டின்" (Teresa Martin).

    ஆம்..., ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் சேவை செய்வதற்காகவே தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்த "தெரசா மார்டின்" என்னும் சகோதரியை தொடர்ந்து செயல்படவிடாமல் காசநோயானது தொல்லை கொடுக்க 24 வயதிலேயே மரணத்தை தழுவினார்.

    நிறைவேறாத அவருடைய ஆசையை தன்மூலமாக நிறைவேற்றி முடிக்கும் விதமாக தன்னுடைய பெயரை "தெரசா" (Teresa) என மாற்றிக்கொண்டார். இதுவே "ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியு" "தெரேசா" வாக மாறிப்போன கதை.

    ஆரம்பகட்டத்தில் அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக சேவையாற்றியவர் பின்பு பள்ளியின் முதல்வரானார்.

    மக்களுக்கு சேவையாற்ற பள்ளி முதல்வர் பதவி தடையாக இருந்ததால் பதவியை தூக்கி எறிந்துவிட்டு அங்குள்ள ஆதரவற்றோர்களுக்கு சேவை செய்வதையே தன்னுடைய வாழ்க்கையின் இலட்சியம் ஆக்கிக்கொள்ள முடிவு செய்தார். எனவே, இந்திய குடியுரிமையைப் பெற்றார்.

    1950 ல் கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்பான "மிஷினரிஸ் ஆப் சாரிட்டி" (Missionaries of Charity) என்ற அமைப்பை துவக்கினார்.

    இந்தியாவில் உருவான இந்த அமைப்பு இன்று உலகம் முழுவதும் தன்னுடைய கிளைகளைப்பரப்பி ஆதரவற்ற மக்களுக்கு தொண்டாற்றி வருகிறது.

    இவருடைய சேவையை பாராட்டி 1980 ல் இந்திய அரசாங்கம் இவருக்கு பாரதரத்னா விருது கொடுத்து கௌரவித்தது.

    வினோபா பாவே.

    Vinoba Bhave.

    பெயர் :- இவருடைய இயற்பெயர் "விநாயக் நரஹரி பாவே" (Vinayak Narahari Bhave). சுருக்கமாக "வினோபா பாவே" (Vinoba Bhave) என அழைக்கப்படுகிறார்.

    நாடு :- இந்தியா - India.

    மாநிலம் :- மகாராஷ்டிரா. Maharashtra. மும்பை மாநகராட்சிக்கு உட்பட்ட  "கொலபா" (Kolaba) என்னும் சிறுநகரத்தில் அமைந்துள்ள "ககோஜி" (Gagoji) என்னும் கிராமத்தில் ( இன்று இந்த கிராமம் "காகோட் புத்ருக்" (Gagode Budruk) என்று பெயர்மாற்றம் பெற்றுள்ளது) பிறந்தார்.

    பிறப்பு :- 1895 செப்டம்பர் 11.

    இறப்பு :- 1982 நவம்பர் 15. (தன்னுடைய 87 வது வயதில் இயற்கை எய்தினார்).

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1983. (இவருடைய மறைவுக்குப்பின்பே இவ்விருது இவருக்கு வழங்கப்பட்டது.

    Vinoba Bhave

    வாழ்க்கை முறை :- இவர் ஒரு ஆன்மீக தலைவர். ஹிந்தி (Hindi) மற்றும் மராத்தி (Marathi) மொழிகளில் பல்வேறு ஆன்மீக நூல்களையும் எழுதியுள்ளார். கூடவே சுதந்திர போராட்ட வீரரும்கூட. மகாத்மா காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டங்களில் மிக தீவிரமாக ஈடுபட்டவர்.

    மகாராஷ்டிராவை சேர்ந்தவரான இவர் விவசாயம் செய்ய நிலம் இல்லாமல் பல ஏழை விவசாயிகள் அல்லல்படுவதை கண்ணுற்றார். எனவே இதற்கு ஒரு தீர்வுகாண விழைந்தவர் "பூதான் இயக்கம்" (Bhoodan Movement) என்ற பெயரில் பூமி தான இயக்கத்தை தொடங்கி அதன் வாயிலாக ஏழை எளியவ விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க உதவி செய்தார்.

    இந்த பூமி தான இயக்கத்திற்காக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். இதன் பயனாக நிலக்கிழார்கள் பலர் தங்களிடமுள்ள நிலத்தின் ஒருபகுதியை தானமாக தர முன்வந்தனர். இவ்வாறு தானமாக பெற்ற நிலங்களின் மொத்த அளவு சுமார் 46,94,271 ஏக்கர் என கூறப்படுகிறது. அதில் 12,85,738 ஏக்கர் நிலங்கள் நிலமில்லாத ஏழை விவசாயிகளுக்கு விவசாயம் செய்ய பிரித்துக் கொடுக்கப்பட்டன. இதனால் பல்லாயிரக்கணக்கான ஏழை விவசாயிகள் பயன்பெற்றனர்.

    ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுத்ததுபோக மீதியுள்ள நிலங்களில் 23,57,398 ஏக்கர் நிலங்கள் களர்நிலங்களாக (Wasteland) இருந்ததாலும் விவசாயம் செய்ய பயன்படாது என்பதாலும் என்ன செய்யலாம் என யோசித்திருக்கும் வேளையிலேயே இந்த இயக்கத்தை வழிநடத்திய உறுப்பினர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல்களால் "பூதான் இயக்கம்" ஆட்டம்காண தொடங்கியது.

    இதனால் நிலம் முறையாக பிரித்துக்கொடுக்கப்படுவதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும்  நிலத்தை தானமாக கொடுத்த நிலக்கிழார்களின் அருந்தவப்புதல்வர் ஒவ்வொருவராக நிலத்திற்கு உரிமைகொண்டாடி நீதிமன்றத்தில் வழக்கு தொடர "பூதான் இயக்கம்" (Bhoodan Movement) முற்றிலுமாக முடங்கிப்போனது.

    இன்றைய தேதியின் கணக்குப்படி தானமாக பெற்ற நிலங்களில் 23 லட்சம் ஏக்கர் நிலங்கள் இன்னும் ஏழைகளுக்கு வழங்கப்படாமலேயே இருக்கிறதாம்.

    ஒரு பண்பாளர் முன்னெடுத்த ஒரு அருமையான திட்டமானது அவர் காலத்திற்குப்பின் சிறந்த வழிகாட்டுதல்கள் இல்லாமல் முடங்கிப்போய் நிற்பது வேதனையே.

    இவருடைய தேசிய மற்றும் சமூக செயற்பாடுகளை பாராட்டி அவருடைய மறைவுக்குப்பின் 1983 ம் ஆண்டு "பாரதரத்னா விருது" (Bharat Ratna Award) அளித்து கவுரவிக்கப்பட்டார்.

    கான் அப்துல் கபார் கான்.

    Khan Abdul Ghaffar Khan.

    பெயர் :- கான் அப்துல் கபார் கான் - Khan Abdul Ghaffar Khan.

    நாடு :- பாகிஸ்தான். Pakistan.

    மாநிலம் :- பெஷாவர் (Peshawar).

    பிறப்பு :- 1890.

    இறப்பு :- 1988 ஜனவரி 20.

    பாரத ரத்னா விருது பெற்ற வருடம் :- 1987.

    Khan Abdul Ghaffar Khan

    வாழ்க்கை முறை :- பாரத ரத்னா விருதை பெற்ற இரண்டாவது வெளிநாட்டுக்காரர் என்ற பெருமை இவரையே சாரும். ஏனெனில் முதல் வெளிநாட்டுக்காரராக அன்னை தெரசாவை குறிப்பிடலாம்.

    1890 ம் ஆண்டு ஒருங்கிணைந்த இந்தியாவின் வடமேற்கு எல்லைப்புற மாகாணமான கைபர் பக்துன்க்வா (Khyber Pakhtunkhwa) ல் அமைத்துள்ள "பெஷாவர்" (peshawar) மாவட்டத்தின் "உட்மன்சாய்" (utmanzai) என்னும் கிராமத்தில் "பஸ்தூன்" (Pashtun) இனத்தில் அதாவது "பட்டானியர்" இனத்தில் பிறந்தார்.

    பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும் மதசார்பற்ற, அனைத்து மதங்களையும் மதிப்பவராகவே தன்னை வளர்த்துக்கொண்டார்.

    கான் அப்துல் கபார் கான் பின்னாளில் பாகிஸ்தானின் பஸ்தூர் பழங்குடி இனத்தின் முக்கிய தலைவராக வலம்வந்தார்.

    சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டவர்களுள் மிகவும் குறிப்பிடத்தக்கவர் இவர் எனலாம். காந்தீயக் கொள்கையாகிய சாத்தியகிரகத்தால் ( Satyagraha) அதிகம் ஈர்க்கப்பட்டதால் அதேமாதிரியான அகிம்சை இயக்கமொன்றை உருவாக்கினார். அதற்கு "குதாய்கித்மத்கர் இயக்கம்" (Khudai Khidmatgar movement) என்று பெயரும் சூட்டினார். "குதாய்கித்மத்கர்" என்றால் கடவுளின் சேவகர்கள் என்று பொருள்.

    இந்த இயக்கம்மூலம் 1 லட்சம் பஷ்தூன் இனமக்களை பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு எதிராக அகிம்ஸை வழியில் போராட தூண்டினார்.

    1930 களில் ஒத்துழையாமை இயக்கத்தை எல்லைப்புற மாகாணங்களில் மிக தீவிரமாக வலுப்படுத்தினார். இதன்மூலமாக அப்பகுதி மக்களின் மனங்களில் சுதந்திர தீயை மூட்டியதால் "எல்லை காந்தி" என்று அனைவராலும் அழைக்கப்பட்டார்.

    இவரை மக்கள் "காந்தி" என்று கொண்டாடுவதற்கும் ஒரு காரணம் உண்டு. இங்கு காந்தியடிகள் வெள்ளையர்களுக்கு எதிராக என்னென்ன போராட்டங்களை எல்லாம் நடத்தி காட்டினாரோ அந்த போராட்டங்களை எல்லாம் வடமேற்கு மாகாணங்களிலும் கான் அப்துல் கபார் கான் நடத்திக்காட்டினார். அதாவது வடமேற்கு மாகாணங்களில் இவரும் ஒரு காந்தியாகவே செயல்பட தொடங்கினார். குறிப்பிட்டுச்சொல்ல வேண்டுமென்றால் உப்பு சத்தியகிரகத்தைக்கூட (Salt Satyagraha) மனிதர் விட்டுவைக்கவில்லை.

    பெஷாவரில் (Peshawar) உள்ள கிஸ்ஸா கஹானி பஜாரில் (Qissa Khwani Bazaar) உப்பு சத்தியாகிரகத்தை (Salt Satyagraha) நடத்திக்காட்டினார். அப்போது ஆயுதம் ஏதுமின்றி அகிம்ஸா வழியில் போராடிய போராட்டக்காரர்கள் மீது வெள்ளைக்கார நாய்கள் துப்பாக்கி சூட்டை அரங்கேற்றினர். கொத்துக்கொத்தாக மக்கள் சுருண்டுவிழ சிலநிமிட இடைவெளியிலேயே சுமார் 200 பேர் மரணத்தை தழுவினர்.

    இன்று இந்தியா சுதந்திரக்காற்றை சுவாசிக்கிறது என்றால் அதில் கான் அப்துல் கபார் கானின் பங்களிப்பும் மிகமிக அதிகம்.

    சுதந்திரத்திற்கான இவருடைய பங்களிப்பிற்கு மதிப்பளிக்கும் விதமாக 1987 ல் பாரதரத்னா விருது (Bharat Ratna Award) கொடுத்து கௌரவிக்கப்பட்டார்.

    💢💢💢💢💢💢

    இப்பதிவின் தொடர்ச்சியாகிய ஆறாவது பகுதியை படிக்க [Part - 6] கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக்குங்க...

    👉👉பாரத ரத்னா - Bharat Ratna Medal Winners - Part - 6.👈👈

    💢💢💢💢💢💢

    📕இதையும் படியுங்களேன்.

    கருத்துரையிடுக

    4 கருத்துகள்

    1. வித்தியாசமான மனிதர்களின் வாழ்க்கை விபரங்கள் நன்று.

      குறிப்பாக திரு. வினோபா பாவே அவர்களைப்பற்றியது தொடர்ந்து வருகிறேன்...

      பதிலளிநீக்கு

    உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள் . நிர்வாகத்தின் பரிசீலனைக்குப்பின் வெளியிடப்படும்.